செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கவிஞர் மன்றத் திங்கள் தேரோட்டம்

 கவிஞர் மன்றத்தில் பாவலர் பொன்.க அவர்களின் பாடலைத் தொடர்ந்து, கவிஞர்கள்    துரைக்குமரன், முனைவர் சு.மாதவன், பேரா.சிவகவி காளிதாசு, பீர்முகம்மது, முத்துப் பாண்டியன், ஷெரீப், பொன்னையா, பொன்னுச்சாமி, புதுகை புதல்வன், சுகுமாரன், பெர்னாட்சா, புலவர் கு.ம.திருப்பதி, சுபாசு சந்திரபோசு, இராமச்சந்திரன், சோலையப்பன்,  ஆகியோர் கவிதைகள் வழங்கினர். 

அவற்றுள் சில...

தமிழன் எப்படிப் பொறுப்பான் - பல 
தடைகள்தாண்டிகருவறுப்பான்
எதிர்ப்புகளைக் கைகள் நசுக்கும்-பின்பு
எதிர்ப்பவரைத் தீயாய்ப் பொசுக்கும்

உண்மையைச் சொன்னால் கசக்கும் - பின்
உள்ளமும் அதனால் வெறுக்கும்
நன்மைகள் செய்தால் இனிக்கும் - அதில் 
நமக்கும் நன்மை கிடைக்கும்                                --- கவிஞர் நிலவை பழனியப்பன்

கண்டு   கொள்ளாதவரையும் 
கண்டு  கொள்கிறேன்     
கண்டு  கொள்வதுதானே பண்பாடு                       --- ஏழைதாசன்

யோக்கியதை

தமிழரின்
தருமம் வெல்ல வேண்டுமென்று
போராடுகிறார்கள்
தர்மபுரியை
அதர்மபுரி ஆக்கியவர்களும்

புத்தன் சிரிக்கிறான் 

சிங்களரில் பௌத்தரில்லை
தமிழரில் சைவருமில்லை                                    --- ஏழைதாசன்

குறுகுறுக்கவில்லையா?

கூட்டிலிருந்து விழும் குஞ்சுகளை மீட்டுத் தூக்க
கூட்டாகக் குரல் கொடுத்துக் கீச்சிடுது குருவியினம்
கட்டெறும்பு கடிக்குதென்று கவ்வித்தன் குட்டிகளை
காப்பாற்ற இடம் மாற்றும் கரிசனமாய் புனையினம்
நட்டநடு வீதியினில் நசுங்கிக் கத்தும் குட்டியினை
நாவினால் நக்கிமெல்ல நலங்கூட்டும் தெருநாய்கள்
கூண்டோடு தமிழினத்தை புவியறிய அழித்தபோதும்
கடல்மேவும் மீனவரைப் புடைத்தடித்துக் கொன்றபோதும்
துரும்பெதையும் அசைக்காமல் துடிப்பற்றுக் கிடக்கின்றாயே
குறுகுறுக்கா நெஞ்சமெனில் தெருநாய்க்கும் கீழாநீ       -- பாவலர் பொன்.க.

                                            உயர்திணையா?



 மலருக்குத் தெரியாது
தான் மணமாலையாவோமா? பிணம்மீது போவோமா என
மலைமுகடு அறியாது
தான் மண்துகளாய்ப் போவோமா? மதிப்புறுசிலை யாவோமா என
மண்ணுக்குந்தான் தெரியாது
தான் எரிமலையாய் ஆவோமா? இனியவளம் தருவோமா என
மழைநீரும் அறியாது
தான் விளைபயிருக்குப் பாய்வோமா? வெள்ளமாய்ப் பாய்ந்தழிப்போமா என
எரிசுடரும் அறியாது
தான் இருள்நீங்க ஒளிர்வோமா? எரித்துப் பொருள் அழிப்போமா என
காற்றுக்கும் தெரியாது
தான் கவின் தென்றலாவோமா? கடும்புயலாய்ப் போவோமா என
அவையெல்லாம் உணர்ச்சியில்லா அல்திணையாம்
உள்ளத்துள் பொதிந்திருக்கும் உயர்ச்சியையும் வீழ்ச்சியையும்
உணர முடியாதபோது மனிதன் மட்டும் உயர்திணையா என்ன? 
                                                                                                                                       -- பாவலர் பொன்.க



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக